All Surahs

Surah 62

الجمعة

Al-Jumuah

62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

11 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றன வானங்களில் உள்ள ஒவ்வொன்றும்; பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! அவன் அரசனாக இருக்கிறான். மிகவும் தூய்மையானவன்; யாவரையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.

2

هُوَ الَّذِیْ بَعَثَ فِی الْاُمِّیّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۗ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ

அவன்தான் உம்மிகளிடையே* ஒரு தூதரை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்றார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.

3

وَّاٰخَرِیْنَ مِنْهُمْ لَمَّا یَلْحَقُوْا بِهِمْ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

4

ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟

இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான்.

5

مَثَلُ الَّذِیْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ یَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ یَحْمِلُ اَسْفَارًا ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟

எந்த மக்கள் மீது ‘தவ்ராத்’ சுமத்தப்பட்டதோ பின்னர் அவர்கள் அதன் பொறுப்பை ஏற்றுச் செயல்படவில்லையோ அந்த மக்களின் உதாரணம், வேதங்களைச் சுமக்கின்ற கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று தூற்றிய மக்களின் உதாரணம் இதனைவிட மோசமானதாகும். இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.

6

قُلْ یٰۤاَیُّهَا الَّذِیْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِیَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

(இவர்களிடம்) கூறும்: “யூதர்களாக ஆகிவிட்டவர்களே! மக்கள் அனைவரையும்விட நீங்கள்தாம் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்கள் என்று கர்வத்துடன் எண்ணுவீர்களானால் உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், மரணத்தை விரும்புங்கள்!”

7

وَلَا یَتَمَنَّوْنَهٗۤ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟

ஆனால், அவர்கள் செய்துவிட்ட தீய செயல்களின் காரணத்தால் அதனை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். மேலும், அல்லாஹ் இந்தக் கொடுமைக்காரர்களை நன்கு அறிந்தே இருக்கின்றான்.

8

قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِیْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِیْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠

(இவர்களிடம்) கூறும்: “எந்த மரணத்தைவிட்டு நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அது திண்ணமாக உங்களை அடைந்தே தீரும். பின்னர், மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாகிய இறைவனின் முன் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். மேலும், நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தீர்களோ அவற்றை அவன் உங்களுக்கு அறிவித்துத் தருவான்.”

9

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰی ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَیْعَ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை யன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!

10

فَاِذَا قُضِیَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِی الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்.

11

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا نْفَضُّوْۤا اِلَیْهَا وَتَرَكُوْكَ قَآىِٕمًا ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟۠

அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.

PreviousAs-SafNextAl-Munafiqun

0:00–:––