وَالصّٰٓفّٰتِ صَفًّا ۟ۙ
அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக!
Surah 37
As-Saffat
37. ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
182 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۟ۙ
அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக!
فَالزّٰجِرٰتِ زَجْرًا ۟ۙ
பின்னர், கண்டித்து விரட்டுவோர் மீது சத்தியமாக!
فَالتّٰلِیٰتِ ذِكْرًا ۟ۙ
பின்னர், நல்லுரையை எடுத்தியம்புவோர் மீது சத்தியமாக!
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ۟ؕ
உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்;
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ۟ؕ
அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் அதிபதியும் கிழக்குகளின் உரிமையாளனுமாவான்.
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِزِیْنَةِ لْكَوَاكِبِ ۟ۙ
அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம்.
وَحِفْظًا مِّنْ كُلِّ شَیْطٰنٍ مَّارِدٍ ۟ۚ
மேலும், மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்திருக்கின்றோம்.
لَا یَسَّمَّعُوْنَ اِلَی الْمَلَاِ الْاَعْلٰی وَیُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍ ۟ۗۖ
ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۟ۙ
அவர்களுக்குத் தொடர்ச்சியான வேதனை இருக்கிறது.
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ ۟
ஆயினும், அந்த ஷைத்தான்களில் யாரேனும் ஒருவன் எதையேனும் இறாஞ்சிக்கொண்டு செல்ல முயன்றால் பிரகாசமான தீச்சுவாலை ஒன்று அவனைப் பின்தொடர்கின்றது.
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِیْنٍ لَّازِبٍ ۟
இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம்.
بَلْ عَجِبْتَ وَیَسْخَرُوْنَ ۪۟
உண்மையில் (அல்லாஹ்வுடைய வியத்தகு ஆற்றல்களைப் பற்றி) நீர் வியப்புறுகின்றீர். ஆனால் இவர்களோ அவனைப் பரிகாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள்!
وَاِذَا ذُكِّرُوْا لَا یَذْكُرُوْنَ ۪۟
விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
وَاِذَا رَاَوْا اٰیَةً یَّسْتَسْخِرُوْنَ ۪۟
ஏதேனும் சான்றினை அவர்கள் பார்த்தால் அதனை ஏளனம் செய்கிறார்கள்.
وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚۖ
மேலும், கூறுகின்றார்கள்: “இது அப்பட்டமான சூனியமே;
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
நாம் இறந்து மண்ணாகி, எலும்புக்கூடாகி விட்டாலும் மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா?
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟ؕ
முன்பு வாழ்ந்து சென்ற நம்முடைய மூதாதையர்களும்கூட எழுப்பப்படுவார்களா?”
قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَ ۟ۚ
இவர்களிடம் நீர் கூறும்: “ஆம்! (அல்லாஹ்வுக்கு எதிராக) நீங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாவீர்கள்.”
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ یَنْظُرُوْنَ ۟
ஒரே ஒரு பேரிரைச்சல்தான்! உடனே அவர்கள் (தங்களுக்குக் கூறப்பட்டு வரும் விஷயங்கள் அனைத்தையும் திடீரென்று தம் கண்களால்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
وَقَالُوْا یٰوَیْلَنَا هٰذَا یَوْمُ الدِّیْنِ ۟
அவ்வேளை அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! எங்கள் துர்ப்பாக்கியமே! இது கூலி கொடுக்கப்படும் நாளாயிற்றே!”
هٰذَا یَوْمُ الْفَصْلِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟۠
எதனை நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அதே தீர்ப்புநாள்தான் இது!
اُحْشُرُوا الَّذِیْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا یَعْبُدُوْنَ ۟ۙ
(இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள்.
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰی صِرَاطِ الْجَحِیْمِ ۟
பிறகு அவர்கள் அனைவருக்கும் நரகத்துக்கான வழியினைக் காட்டுங்கள்
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۟ۙ
சற்றே அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்களிடம் கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கிறது!
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ۟
உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இப்போது ஏன் ஒருவருக்கொருவர் நீங்கள் உதவி புரிந்து கொள்வதில்லை?
بَلْ هُمُ الْیَوْمَ مُسْتَسْلِمُوْنَ ۟
அடே! இன்று அவர்கள் தங்களையும் (ஒருவருக்கொருவர் மற்றவர்களையும் இறைவனிடம்) சரணடையச் செய்து கொண்டிருக்கின்றார்களே!”
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள்; ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யத் தொடங்குவார்கள்.
قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْیَمِیْنِ ۟
(பின்பற்றி வாழ்ந்த மக்கள் தம்முடைய தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “சரியான திசையில் வருவது போல் எங்களிடம் நீங்கள் வந்தீர்கள்.”
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟ۚ
அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “இல்லை, நீங்கள்தான் நம்பிக்கை கொள்வோராய் இருக்கவில்லை!
وَمَا كَانَ لَنَا عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِیْنَ ۟
எங்களுக்கு உங்கள்மீது எந்த அதிகாரமும் இருந்ததில்லை. நீங்களே வரம்புமீறிய மக்களாய் வாழ்ந்தீர்கள்.
فَحَقَّ عَلَیْنَا قَوْلُ رَبِّنَاۤ ۖۗ اِنَّا لَذَآىِٕقُوْنَ ۟
இறுதியில், ‘நாங்கள் வேதனையைச் சுவைத்தே ஆக வேண்டும்’ எனும் எங்கள் இறைவனின் தீர்ப்புக்கு உரித்தானவர்களாகிவிட்டோம்!
فَاَغْوَیْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِیْنَ ۟
ஆகவே, நாங்கள் உங்களை வழிதவறச்செய்தோம். ஏனெனில், நாங்களே வழிதவறிப்போயிருந்தோம்!”
فَاِنَّهُمْ یَوْمَىِٕذٍ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
இவ்வாறு அந்நாளில் அவர்கள் அனைவரும் வேதனையில் பங்கு பெறுபவர்களாய் இருப்பார்கள்.
اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
திண்ணமாக, நாம் குற்றவாளிகளை இவ்வாறுதான் நடத்துகின்றோம்.
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِیْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ یَسْتَكْبِرُوْنَ ۟ۙ
இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களெனில், “உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் தற்பெருமை கொண்டார்கள்;
وَیَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۟ؕ
மேலும், கூறினார்கள்: ‘பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’
بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِیْنَ ۟
அவரோ உண்மையில் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தார்; மேலும், ஏனைய இறைத்தூதர்களை மெய்ப்படுத்திக் கொண்டுமிருந்தார்.
اِنَّكُمْ لَذَآىِٕقُوا الْعَذَابِ الْاَلِیْمِ ۟ۚ
(இப்போது அவர்களிடம் கூறப்படும்:) ‘துன்புறுத்தும் வேதனையின் இன்பத்தை நீங்கள் சுவைக்கப் போவது திண்ணம்.
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
உங்களுக்கு எவ்விதக் கூலி கொடுக்கப்பட்டாலும் நீங்கள் செய்துகொண்டிருந்த அதே செயல்களுக்குப் பதிலாகத்தான் அது கொடுக்கப்படும்.’
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
ஆயினும், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் இந்தத் தீயகதியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
اُولٰٓىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌ ۟ۙ
நன்கு அறியப்பட்ட அருட்பேறுகள் அவர்களுக்கு இருக்கின்றன;
فَوَاكِهُ ۚ وَهُمْ مُّكْرَمُوْنَ ۟ۙ
எல்லாவகையான சுவையான பொருள்களும்! அவர்கள் கண்ணியத்தோடு அமர்த்தப்படுவார்கள்.
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟ۙ
அருள் நிறைந்த சுவனப்பூங்காக்களில்
عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
மஞ்சங்களில் எதிரெதிரே உட்கார்ந்திருப்பார்கள்.
یُطَافُ عَلَیْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும்.
بَیْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۟ۚۖ
ஒளிரக்கூடிய மது அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்.
لَا فِیْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا یُنْزَفُوْنَ ۟
(அவர்களின் உடல்களுக்கு) அதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது; அவர்களின் மதியும் கெட்டுப்போகாது.
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِیْنٌ ۟ۙ
மேலும், தாழ்த்திய பார்வை உடைய அழகிய கண்களைக்கொண்ட நங்கையரும் அவர்களிடம் இருப்பர்.
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
அப்பெண்கள் முட்டை ஓட்டின் கீழே மறைந்திருக்கும் மெல்லிய தோலைப் போன்று மென்மையாய் இருப்பார்கள்.
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவரின் பக்கம் முன்னோக்கி நிலைமைகளை விசாரிப்பார்கள்.
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ اِنِّیْ كَانَ لِیْ قَرِیْنٌ ۟ۙ
அவர்களில் ஒருவர் கூறுவார் “(உலகில்) எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.
یَّقُوْلُ اَىِٕنَّكَ لَمِنَ الْمُصَدِّقِیْنَ ۟
‘என்ன, உண்மை என ஏற்றுக்கொள்பவரில் நீயும் ஒருவனா?
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِیْنُوْنَ ۟
நாம் இறந்து மண்ணோடு மண்ணாகி எலும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் திண்ணமாக நமக்குக் கூலியும், தண்டனையும் வழங்கப்படுமா?’ என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக்கொண்டிருந்தான்.
قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۟
(இப்போது அவன் எங்கிருக்கின்றான் என்பதை) நீங்கள் காண விரும்புகின்றீர்களா?”
فَاطَّلَعَ فَرَاٰهُ فِیْ سَوَآءِ الْجَحِیْمِ ۟
இவ்வாறு கூறிக்கொண்டே அவர் குனிவார். அப்போது நரகின் ஆழத்தில் அவனைக் கண்டு கொள்வார்.
قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِیْنِ ۟ۙ
மேலும், அவனை நோக்கிக் கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயம் நீ என்னை அழித்துவிடவே முனைந்திருந்தாய்.
وَلَوْلَا نِعْمَةُ رَبِّیْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
என் இறைவனின் அருள் என்னை அரவணைக்காதிருந்தால், பிடித்துக் கொண்டு வரப்பட்டிருப்பவர்களில் நானும் ஒருவனாகி இருந்திருப்பேன்.
اَفَمَا نَحْنُ بِمَیِّتِیْنَ ۟ۙ
சரி, இனி நாம் மரணிக்கக்கூடியவர் அல்லவே!
اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟
நமக்கு வரவேண்டிய மரணமோ முன்பே வந்துவிட்டதே! இனி நமக்கு எவ்வித வேதனையும் ஏற்படப்போவதில்லை!”
اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
திண்ணமாக, இதுவே மகத்தான வெற்றியாகும்.
لِمِثْلِ هٰذَا فَلْیَعْمَلِ الْعٰمِلُوْنَ ۟
செயல்படுவோர் இத்தகைய வெற்றிக்காகவே செயல்பட வேண்டும்!
اَذٰلِكَ خَیْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ ۟
இந்த விருந்து சிறந்ததா? அல்லது ‘ஜக்கூம்’ மரமா? (என்பதை நீங்கள் கூறுங்கள்).
اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِیْنَ ۟
நாம் அந்த மரத்தை அக்கிரமக்காரர்களுக்கு ஒரு சோதனையாக ஆக்கியிருக்கிறோம்.
اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِیْۤ اَصْلِ الْجَحِیْمِ ۟ۙ
அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து முளைத்து வருகின்ற ஒரு மரம்.
طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّیٰطِیْنِ ۟
அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருக்கும்.
فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ؕ
நரகவாசிகள்தாம் அதனைத் தின்பார்கள். மேலும் அதனைக் கொண்டே வயிறுகளை நிரப்புவார்கள்.
ثُمَّ اِنَّ لَهُمْ عَلَیْهَا لَشَوْبًا مِّنْ حَمِیْمٍ ۟ۚ
பிறகு, அத்துடன் அவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிக்கக் கிடைக்கும்.
ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاۡاِلَی الْجَحِیْمِ ۟
பின்னர் அதே நரகத்திற்குத்தான் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்.
اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّیْنَ ۟ۙ
இவர்கள் எப்படிப்பட்ட மக்களென்றால், தம் முன்னோர்கள் நெறிதவறிச் செல்பவர்களாய் இருக்கக் கண்டார்கள்.
فَهُمْ عَلٰۤی اٰثٰرِهِمْ یُهْرَعُوْنَ ۟
மேலும், அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள்.
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِیْنَ ۟ۙ
உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழிகெட்டுப் போயிருந்தார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا فِیْهِمْ مُّنْذِرِیْنَ ۟
மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்களையும் நாம் அனுப்பியிருந்தோம்.
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟ۙ
இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று?
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟۠
ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே!
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ
(இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்).
وَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ؗۖ
அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம்.
وَجَعَلْنَا ذُرِّیَّتَهٗ هُمُ الْبٰقِیْنَ ۟ؗۖ
இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம்.
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗۖ
மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்!
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகின்றோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார்.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟
பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
மேலும், நூஹின் வழியில் செல்பவராகவே இப்ராஹீம் இருந்தார்;
اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِیْمٍ ۟
தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது,
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۟ۚ
தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும் இவ்வாறு கூறியபோது: “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِیْدُوْنَ ۟ؕ
அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?
فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
பிறகு அகில உலகங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?”
فَنَظَرَ نَظْرَةً فِی النُّجُوْمِ ۟ۙ
பிறகு, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை செலுத்தினார்.
فَقَالَ اِنِّیْ سَقِیْمٌ ۟
மேலும் கூறினார்: “நான் நோயுற்றிருக்கின்றேன்.”
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِیْنَ ۟
எனவே, அம்மக்கள் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ۚ
பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை?
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟
நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?”
فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟
அதன் பிறகு அவர் அவற்றின் மீது பாய்ந்து வலக்கரத்தால் தாக்கினார்.
فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟
பின்னர், அம்மக்கள் (திரும்பி வந்ததும்) அவரிடம் ஓடிவர,
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ
அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்?
وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟
உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய அப்பொருள்களையும் படைத்தான்?”
قَالُوا ابْنُوْا لَهٗ بُنْیَانًا فَاَلْقُوْهُ فِی الْجَحِیْمِ ۟
அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!”
فَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِیْنَ ۟
அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். எனினும், நாம் அவர்களையே தோல்வியுறச்செய்தோம்.
وَقَالَ اِنِّیْ ذَاهِبٌ اِلٰی رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழிகாட்டுவான்.
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்.”
فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِیْمٍ ۟
(இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰی ؕ قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟
அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.”
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார்.
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்: “இப்ராஹீமே!
قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம்.
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟
திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது.”
وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟
மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۖ
பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது!
كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
மேலும், இஸ்ஹாக் பற்றியும் அவருக்கு நாம் நற்செய்தி அறிவித்தோம். அவர் ஒரு நபியாகவும் சான்றோர்களுள் ஒருவராகவும் இருந்தார்.
وَبٰرَكْنَا عَلَیْهِ وَعَلٰۤی اِسْحٰقَ ؕ وَمِنْ ذُرِّیَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِیْنٌ ۟۠
மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
மேலும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பேருபகாரம் செய்தோம்.
وَنَجَّیْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
அவர்களையும் அவர்களின் சமூகத்தார்களையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம்.
وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟ۚ
அவர்களுக்கு உதவி வழங்கினோம். அதன் காரணமாக அவர்களே வெற்றி கொள்வோராகத் திகழ்ந்தார்கள்.
وَاٰتَیْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِیْنَ ۟ۚ
மிகத் தெளிவான வேதத்தை அவர்களுக்கு வழங்கினோம்.
وَهَدَیْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۚ
மேலும், அவர்களுக்கு நேரிய வழியையும் காண்பித்தோம்.
وَتَرَكْنَا عَلَیْهِمَا فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் நிலைத்திருக்கச் செய்தோம்.
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
சாந்தி உண்டாகட்டும், மூஸா மற்றும் ஹாரூன் மீது!
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய நற்கூலியையே வழங்குகின்றோம்.
اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
உண்மையில் அவ்விருவரும் நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் உள்ளவர்களாவர்.
وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
மேலும், இல்யாஸும் திண்ணமாக இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார்.
اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ ۟
அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா?
اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِیْنَ ۟ۙ
‘பஅலை’* அழைக்கின்றீர்கள். படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டுவிடுகின்றீர்களே!
اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
அதாவது, உங்களின் அதிபதியும், உங்களுக்கு முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை!
فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் இப்போது தண்டனைக்காகக் கொண்டுவரப்படுபவர்களாய் உள்ளனர்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர!
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
மேலும், பின் தோன்றிய தலைமுறைகளில் இல்யாஸுடைய நற்புகழை நிலைப்படுத்தினோம்.
سَلٰمٌ عَلٰۤی اِلْ یَاسِیْنَ ۟
சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது!
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
நன்மை செய்வோருக்குத் திண்ணமாக நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார்.
وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
மேலும், இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டவர்களுள் லூத்தும் ஒருவராய்த் திகழ்ந்தார்.
اِذْ نَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
அந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: லூத்தையும், அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟
பின்தங்கியவர்களோடு சேர்ந்துவிட்ட ஒரு கிழவியைத் தவிர!
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟
பின்னர், எஞ்சியிருந்த மற்றவர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிட்டோம்.
وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَیْهِمْ مُّصْبِحِیْنَ ۟ۙ
நீங்கள் (இப்போது இரவிலும், பகலிலும்) அழிந்து போன அவர்களின் நகரங்களின் அருகே கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்!
وَبِالَّیْلِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
நீங்கள் அறிவு பெறமாட்டீர்களா, என்ன?
وَاِنَّ یُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
திண்ணமாக, யூனுஸும் இறைத்தூதர்களுள் ஒருவராய் இருந்தார்.
اِذْ اَبَقَ اِلَی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
அவர் ஒரு நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைத்துப் பாருங்கள்!
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِیْنَ ۟ۚ
பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்து கொண்டார். அதில் தோற்றுப் போனார்.
فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِیْمٌ ۟
இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது; அவரோ பழிப்புக்குரியவராய் இருந்தார்.
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِیْنَ ۟ۙ
அவர் இறைவனைத் துதிப்பவர்களுள் ஒருவராய் இல்லாதிருந்தால்
لَلَبِثَ فِیْ بَطْنِهٖۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟ۚ
மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார்.
فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِیْمٌ ۟ۚ
இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம்.
وَاَنْۢبَتْنَا عَلَیْهِ شَجَرَةً مِّنْ یَّقْطِیْنٍ ۟ۚ
பிறகு படர்கின்ற கொடியை அவர் மீது (நிழலிட) முளைக்கச் செய்தோம்.
وَاَرْسَلْنٰهُ اِلٰی مِائَةِ اَلْفٍ اَوْ یَزِیْدُوْنَ ۟ۚ
பின்னர், அவரை நாம் ஓர் இலட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் அனுப்பினோம்.
فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟ؕ
அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களை வாழவிட்டோம்.
فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَ ۟ۙ
பின்னர், இவர்களிடம் சற்று வினவுவீராக: உம் இறைவனுக்குப் பெண்மக்கள்; இவர்களுக்கு ஆண் மக்களா? (இந்தப் பேச்சு இவர்களின் மனதுக்கு சரியெனப் படுகிறதா என்ன?)
اَمْ خَلَقْنَا الْمَلٰٓىِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ ۟
அல்லது உண்மையில், நாம் வானவர்களைப் பெண் மக்களாகவே படைத்திருக்கின்றோமா? கண்ணால் பார்த்தவற்றைத்தான் இவர்கள் கூறுகின்றார்களா?
اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَیَقُوْلُوْنَ ۟ۙ
நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். தாமாகப் புனைந்துதான் அவர்கள் கூறுகின்றார்கள்;
وَلَدَ اللّٰهُ ۙ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
அல்லாஹ் குழந்தைகளைப் பெற்றெடுத்தான் என்று. மேலும், உண்மையில் இவர்கள் பொய்யர்களாவர்.
اَصْطَفَی الْبَنَاتِ عَلَی الْبَنِیْنَ ۟ؕ
ஆண்மக்களை விட்டு விட்டு பெண்மக்களை அல்லாஹ் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
مَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எப்படிப்பட்ட முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள்!
اَفَلَا تَذَكَّرُوْنَ ۟ۚ
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
அல்லது (உங்களின் வாதங்களுக்கு) தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா?
فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் அத்தகைய உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!
وَجَعَلُوْا بَیْنَهٗ وَبَیْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும் இடையே இவர்கள் உறவுமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் குற்றவாளிகளாய் கொண்டு வரப்படுவார்கள் என்பதை வானவர்கள் நன்கறிந்துள்ளார்கள்.
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
(மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்:) அல்லாஹ் தூய்மை வாய்ந்தவன், அந்தத் தன்மைகளை விட்டு!
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
அதாவது, அவனுடைய வாய்மையான அடியார்களைத் தவிர மற்றவர்கள் (அவனைக் குறித்து) கற்பிக்கின்ற தன்மைகளை விட்டு!
فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۟ۙ
ஆக, நீங்களும் நீங்கள் வணங்கி வருகின்ற இந்தத் தெய்வங்களும் ,
مَاۤ اَنْتُمْ عَلَیْهِ بِفٰتِنِیْنَ ۟ۙ
அல்லாஹ்வை விட்டு எவரையும் திசைதிருப்பிவிட முடியாது;
اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِیْمِ ۟
ஆனால், கொழுந்துவிட்டு எரியும் நரக நெருப்பில் எரிந்து கரிந்து போகக் கூடியவனைத்தவிர!
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۟ۙ
மேலும், எங்களுடைய நிலைமை என்னவெனில், எங்களில் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடம் இருக்கின்றது.
وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۟ۚ
மேலும், திண்ணமாக, நாங்களே அணிவகுத்து நின்று பணிபுரிபவர்களாய் இருக்கின்றோம்.
وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ۟
இன்னும் திண்ணமாக, நாங்களே துதி செய்பவர்களாய் இருக்கின்றோம்.
وَاِنْ كَانُوْا لَیَقُوْلُوْنَ ۟ۙ
திண்ணமாக, இவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்தார்கள்,
لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
“முந்தைய சமுதாயங்களுக்குக் கிடைத்திருந்த அறிவுரை எங்களுக்கும் கிடைத்திருந்தால்,
لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
நாங்களும் அல்லாஹ்வின் வாய்மை மிக்க அடியார்களாக விளங்கி இருப்போம்” என்று!
فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
ஆயினும் (அது வந்துவிட்டபோது) இவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்! இனி (தமது நடத்தைக்கான விளைவை) அதிவிரைவில் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
நம்மால் தூதர்களாக அனுப்பப்பட்ட நம்முடைய அடியார்களுக்கு நாம் முன்னரே இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளோம்.
اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ۪۟
நிச்சயமாய், அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ ۟
மேலும், திண்ணமாக நமது படையினர்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வார்கள்.
فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
ஆகவே, (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே சிறிது காலம் விட்டுவிடும்!
وَّاَبْصِرْهُمْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
மேலும், பார்த்துக் கொண்டிரும்! மிக விரைவில் இவர்களும் தாங்களாகவே கண்டு கொள்வார்கள்.
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா?
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِیْنَ ۟
அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாள் மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்.
وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
எனவே, சிறிது காலத்திற்கு இவர்களை விட்டுவிடும்!
وَّاَبْصِرْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
மேலும், பார்த்துக் கொண்டிரும்; மிக விரைவில் இவர்களும் தாமாகவே கண்டு கொள்வார்கள்!
سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا یَصِفُوْنَ ۟ۚ
தூய்மையானவன் உம் இறைவன்; கண்ணியத்திற்கு உரித்தானவன்; இவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டு (அவன் தூய்மையானவன்!)
وَسَلٰمٌ عَلَی الْمُرْسَلِیْنَ ۟ۚ
மேலும், சாந்தி உண்டாகட்டும்; இறைத்தூதர்கள் அனைவர் மீதும்!
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரித்தானது!