All Surahs

Surah 27

النمل

An-Naml

27. ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)

93 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

طٰسٓ ۫ تِلْكَ اٰیٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِیْنٍ ۟ۙ

தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.

2

هُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟ۙ

இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியும் நற்செய்தியுமாகும்.

3

الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟

அவர்கள் எத்தகையவர்களெனில், தொழுகையை நிலை நாட்டுகின்றார்கள்; ஜகாத் கொடுக்கின்றார்கள். மேலும், மறுமையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

4

اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَیَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ یَعْمَهُوْنَ ۟ؕ

உண்மை யாதெனில், யார் மறுமையை நம்புவதில்லையோ அவர்களுக்கு அவர்களின் தீயசெயல்களை நாம் அழகுபடுத்திக் காட்டினோம். எனவே, அவர்கள் தடுமாறித் திரிகின்றார்கள்.

5

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَهُمْ سُوْٓءُ الْعَذَابِ وَهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟

அவர்கள் எத்தகையவர்கள் எனில், அவர்களுக்கு மோசமான தண்டனை இருக்கின்றது; மேலும், மறுமையில் அவர்கள்தாம் அனைவரையும்விட அதிக இழப்புக்குரியவர்களாய் இருப்பார்கள்.

6

وَاِنَّكَ لَتُلَقَّی الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِیْمٍ عَلِیْمٍ ۟

மேலும், (நபியே!) நுண்ணறிவாளனும் நன்கு அறிந்தவனுமான இறைவனிடமிருந்து திண்ணமாக இந்தக் குர்ஆனை நீர் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்.

7

اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا ؕ سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟

(அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததை இவர்களுக்கு நினைவூட்டுங்கள்) மூஸா தம் குடும்பத்தாரிடம் அப்பொழுது கூறினார்: “நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் இப்பொழுதே அங்கிருந்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டு வருகின்றேன். அல்லது தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வருகின்றேன். நீங்கள் குளிர் காய்ந்து கொள்ளலாம்.”

8

فَلَمَّا جَآءَهَا نُوْدِیَ اَنْ بُوْرِكَ مَنْ فِی النَّارِ وَمَنْ حَوْلَهَا ؕ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

அங்கு அவர் சென்றதும் ஓர் உருவிலி (அசரீரி) கேட்டது: “பாக்கியம் உள்ளவர்கள் ஆவர் இந்த நெருப்பில் உள்ளவரும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும்!” தூய்மையானவன் ஆவான்; அகிலத்தார் அனைவரையும் வளர்த்துப் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்!

9

یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ

“மூஸாவே! நான்தான் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்!

10

وَاَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰی لَا تَخَفْ ۫ اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ ۟ۗۖ

மேலும், உமது கைத்தடியைச் சற்று எறியும்!” உடனே அது (அந்தத் தடி) பாம்பு போல் அசைவதை மூஸா கண்டபோது பின்னோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “மூஸாவே அஞ்சாதீர்! திண்ணமாக, என் முன்னிலையில் தூதர்கள் அஞ்சுவதில்லை;

11

اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًا بَعْدَ سُوْٓءٍ فَاِنِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

ஏதேனும் தவறு செய்திருந்தாலே தவிர! பின்னர் தீமை செய்த பிறகு (தன் செயலை) அவர் நன்மையாக மாற்றிக் கொண்டால் திண்ணமாக நான் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றேன்.

12

وَاَدْخِلْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ۫ فِیْ تِسْعِ اٰیٰتٍ اِلٰی فِرْعَوْنَ وَقَوْمِهٖ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟

மேலும், நீர் உமது கையை உமது (சட்டையின்) மார்புப் பகுதியில் நுழைப்பீராக! அது பிரகாசிக்கக் கூடியதாய் வெளிப்படும் எவ்விதக் கேடுமின்றி!” இவை (இந்த இரு சான்றுகளும்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்தாரிடமும் (கொண்டு செல்வதற்குரிய) ஒன்பது சான்றுகளில் உள்ளவையாகும். அவர்கள் மிகவும் தீய நடத்தை உடைய மக்களாய் இருக்கின்றார்கள்.

13

فَلَمَّا جَآءَتْهُمْ اٰیٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚ

ஆயினும், நம்முடைய மிகத் தெளிவான சான்றுகள் அம்மக்களின் முன் வந்தபோது இது அப்பட்டமான சூனியமாகும் என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.

14

وَجَحَدُوْا بِهَا وَاسْتَیْقَنَتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟۠

அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும்தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழப்பவாதிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை இப்போது நீர் பார்த்துக் கொள்ளும்.

15

وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟

(மற்றொரு புறம்) நாம் தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். மேலும், அவ்விருவரும் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும்; அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரைவிட எங்களுக்கு சிறப்பை வழங்கினான்.”

16

وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟

பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார். அவர் கூறினார்: “மக்களே! எங்களுக்குப் பறவைகளின் பேச்சுகள் கற்றுத் தரப்பட்டுள்ளன. எல்லாவிதமான பொருள்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திண்ணமாக, இது (அல்லாஹ்வின்) வெளிப்படையான அருளாகும்.”

17

وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟

மேலும், ஸுலைமானுக்காக ஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன.

18

حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

(ஒருமுறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார்.) அவர்கள் அனைவரும் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது ஓர் எறும்பு கூறியது: “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்துவிடக்கூடாது.”

19

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِیْ بِرَحْمَتِكَ فِیْ عِبَادِكَ الصّٰلِحِیْنَ ۟

ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!”

20

وَتَفَقَّدَ الطَّیْرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الْهُدْهُدَ ۖؗ اَمْ كَانَ مِنَ الْغَآىِٕبِیْنَ ۟

(மற்றொரு சமயம்) ஸுலைமான் பறவைகளின் நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் கூறினார்: “என்ன விஷயம்? நான் ஹுத்ஹுத் மரங்கொத்தி பறவையைக் காணவில்லையே! அது எங்காவது காணாமல் போய்விட்டதா?

21

لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِیْدًا اَوْ لَاَاَذْبَحَنَّهٗۤ اَوْ لَیَاْتِیَنِّیْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟

நிச்சயம் அதனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன். இல்லாவிட்டால் பொருத்தமான காரணத்தை என்னிடம் அது சமர்ப்பிக்க வேண்டும்.”

22

فَمَكَثَ غَیْرَ بَعِیْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍۭ بِنَبَاٍ یَّقِیْنٍ ۟

அதிக தாமதமின்றி அது வந்து கூறியது: “தங்கள் அறிவுக்கு வராத சில செய்திகளை நான் பெற்றிருக்கின்றேன். நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்.

23

اِنِّیْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِیَتْ مِنْ كُلِّ شَیْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِیْمٌ ۟

அங்கு அம்மக்கள் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு எல்லாவிதமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கம்பீரமான ஓர் அரியணையும் அவளுக்கு உள்ளது.

24

وَجَدْتُّهَا وَقَوْمَهَا یَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ فَهُمْ لَا یَهْتَدُوْنَ ۟ۙ

அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம் பணிவதையும் நான் கண்டேன்.” ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து, நேரிய பாதையில் செல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டான்.

25

اَلَّا یَسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ یُخْرِجُ الْخَبْءَ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟

இதனால் வானங்கள் மற்றும் பூமியில் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும், நீங்கள் மறைத்து வைப்பவற்றையும் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு சிரம் பணிய வேண்டும் எனும் நேர்வழியை அவர்கள் அடையாதவர்களாய் இருக்கின்றார்கள்.

26

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟

அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே மாபெரும் அர்ஷுக்கு* உரிமையாளன் ஆவான்.

27

قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟

ஸுலைமான் கூறினார்: “நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப் போதே நாம் பார்த்துவிடுகின்றோம்.

28

اِذْهَبْ بِّكِتٰبِیْ هٰذَا فَاَلْقِهْ اِلَیْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا یَرْجِعُوْنَ ۟

என்னுடைய இந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று அவர்களிடம் போட்டுவிடு. பிறகு, அவர்களை விட்டு விலகி நின்று அவர்கள் என்ன பதில் நட வடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என்பதை நீ கவனி!”

29

قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اِنِّیْۤ اُلْقِیَ اِلَیَّ كِتٰبٌ كَرِیْمٌ ۟

அரசி கூறினாள்: “அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டிருக்கின்றது.

30

اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ

நிச்சயமாக அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. மேலும், அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது.

31

اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠

“எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். மேலும், முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்" எனும் வாசகம் அதில் உள்ளது.

32

قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِیْ فِیْۤ اَمْرِیْ ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰی تَشْهَدُوْنِ ۟

(கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு) அரசி கூறினாள்: “சமுதாயத் தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் எனக்கு ஆலோசனை வழங்குங்கள். நீங்கள் இல்லாமல் எந்த விவகாரத்தையும் நான் முடிவு செய்வதில்லை.”

33

قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِیْدٍ ۙ۬ وَّالْاَمْرُ اِلَیْكِ فَانْظُرِیْ مَاذَا تَاْمُرِیْنَ ۟

அவர்கள் பதிலளித்தார்கள்: “நாம் வல்லமை மிக்கவர்களாகவும் கடுமையாகப் போரிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.”

34

قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْیَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً ۚ وَكَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟

அரசி கூறினாள்: “அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்துவிடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்.

35

وَاِنِّیْ مُرْسِلَةٌ اِلَیْهِمْ بِهَدِیَّةٍ فَنٰظِرَةٌ بِمَ یَرْجِعُ الْمُرْسَلُوْنَ ۟

எனவே, அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர், என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.”

36

فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟

அ(ரசியின் தூது)வர் ஸுலைமானிடம் வந்ததும் ஸுலைமான் கேட்டார்: “நீங்கள் பொருளால் எனக்கு உதவி புரிந் திட விரும்புகின்றீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது உங்களுக்கு வழங்கியிருப்பதைவிட எவ்வளவோ அதிகமாகும். எனவே, உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ந்திருங்கள்.

37

اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟

(தூதரே!) உம்மை அனுப்பியவர்களிடம் நீர் திரும்பிச் செல்லும். அவர்களால் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்குப் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு அவர்களிடம் நாம் திண்ணமாக வரப்போகின்றோம். அவர்கள் கேவலப்பட்டுப் போகும் வகையில் அங்கிருந்து அவர்களை இழிவானவர்களாக வெளியேற்றி விடுவோம்!”

38

قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟

ஸுலைமான் கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப் படிந்தவர்களாய் என்னிடம் வருமுன் அவளுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வரமுடியும்?”

39

قَالَ عِفْرِیْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ ۚ وَاِنِّیْ عَلَیْهِ لَقَوِیٌّ اَمِیْنٌ ۟

பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.”

40

قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۖ۫ لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟

அவர்களுள் ஓரளவு வேத அறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார். அவ்வாறே அவ்வரியணை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதுமே ஸுலைமான் (உரக்கக்) கூறினார்: “இது என் இறைவனின் அருட்கொடையாகும்; நான் நன்றி செலுத்துகின்றேனா, நன்றி கொல்கின்றேனா என என்னை அவன் சோதிப்பதற்காக! மேலும், யாரேனும் நன்றி செலுத்தினால் அவருடைய நன்றி அவருக்கே நன்மை தரும். தவிர, யாரேனும் நன்றி கொன்றால் திண்ணமாக, என்னுடைய இறைவன் தேவைகள் அற்றவனாகவும், பெரும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றான்!”

41

قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِیْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِیْنَ لَا یَهْتَدُوْنَ ۟

ஸுலைமான் கூறினார்: “அரசியின் அரியணையை அடையாளம் காண முடியாத வகையில் அவள்முன் வைத்து விடுங்கள். உண்மை நிலையைத் தெரிந்து கொள்கின்றாளா, அல்லது சரியான வழியை அறிந்து கொள்ளாதவர்களுள் ஒருத்தியாய் இருக்கின்றாளா என்று நாம் பார்த்துவிடுவோம்.”

42

فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟

அரசி வருகை தந்ததும் ‘உம்முடைய அரியணை இப்படித்தான் உள்ளதா?’ என்று அவளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவள் கூறினாள்: “இதுவோ, அதைப் போலவே இருக்கின்றது. நாங்கள் முன்பே அறிந்திருந்தோம். சிரம் தாழ்த்தி கீழ்ப்படிந்தவர்களாய் இருந்தோம் (அல்லது முஸ்லிம்களாகி விட்டிருந்தோம்.)”

43

وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِیْنَ ۟

அல்லாஹ்வை விட்டுவிட்டு அவள் எந்த தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தாளோ அந்த வணக்கம்தான் (நம்பிக்கை கொள்ளவிடாமல்) அவளைத் தடுத்துவிட்டிருந்தது. ஏனெனில், அவள் நிராகரிக்கக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவளாய் இருந்தாள்.

44

قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬ قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠

“மாளிகையினுள் நுழைவீராக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைப் பார்த்தபோது தண்ணீர்த் தடாகம் என்று கருதிக் கொண்டாள். (இறங்குவதற்காகத்) தன் உடையை கெண்டைக்கால்களுக்கு மேல் உயர்த்தினாள். ஸுலைமான் கூறினார்: “இது பளபளக்கும் கண்ணாடி மாளிகையின் தரையாகும்!” அதற்கு அவள் கூறினாள்: “என் இறைவனே! (இன்று வரை) எனக்கு நானே கொடுமை புரிந்து கொண்டிருந்தேன். இனி நான் ஸுலைமானுடன் சேர்ந்து அகிலமனைத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ ஏற்றுக் கொள்கின்றேன்!”

45

وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟

மேலும், நாம் ஸமூத் சமூகத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்” (என்னும் செய்தியுடன் தூதராக) அனுப்பினோம். அப்போது அவர்கள் இரு குழுவினராய்ப் பிரிந்து தர்க்கம் புரியத் தொடங்கிவிட்டார்கள்.

46

قَالَ یٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟

ஸாலிஹ் கூறினார்: “என் சமூகத்தினரே! நன்மை வருமுன் தீமைக்காக ஏன் அவசரப்படுகின்றீர்கள்? நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடாதா? உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடுமே!”

47

قَالُوا اطَّیَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ ؕ قَالَ طٰٓىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ ۟

அதற்கவர்கள், “நாங்கள் உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் துர்ச் சகுனமாகக் கருதுகின்றோம்” என்றார்கள். ஸாலிஹ் பதிலளித்தார்: “உங்களின் (நல்ல, கெட்ட) சகுனம் பற்றிய விஷயம் அல்லாஹ்விடம் உள்ளது. உண்மை யாதெனில், நீங்கள் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்!”

48

وَكَانَ فِی الْمَدِیْنَةِ تِسْعَةُ رَهْطٍ یُّفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟

அந்நகரில் ஒன்பது கலகத் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டில் குழப்பத்தைப் பரப்பிக்கொண்டும், மேலும், எவ்விதச் சீர்திருத்தத்தை செய்யாமலும் இருந்தனர்.

49

قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟

அவர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “நீங்கள் இறைவன் மீது சத்தியம் செய்து சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் நாம் ஸாலிஹ் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் இரவில் தாக்குதல் நடத்துவோம் என்று! பிறகு அவருடைய பாதுகாவலரிடம் கூறிவிடுவோம் ஸாலிஹுடைய குடும்பம் கொல்லப்பட்ட சமயத்தில் நாங்கள் அங்கு இருக்கவில்லை. நாங்கள் உண்மைதான் கூறுகின்றோம்.”

50

وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

அவர்கள் செய்தது இந்த சூழ்ச்சிதான்! பிறகு, அவர்கள் அறியாத வகையில் நாம் வேறொரு சூழ்ச்சியைச் செய்தோம்.

51

فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ ۙ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِیْنَ ۟

அவர்களுடைய சூழ்ச்சியின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக் கொள்ளும். அவர்களையும் அவர்களுடைய சமுதாய மக்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம்;

52

فَتِلْكَ بُیُوْتُهُمْ خَاوِیَةً بِمَا ظَلَمُوْا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟

அவர்கள் செய்த கொடுமையின் காரணமாக! அதோ! அவர்களுடைய இல்லங்கள் வெறுமையாய்க் கிடக்கின்றன. திண்ணமாக, அறியக்கூடிய மக்களுக்கு இதில் (படிப்பினை மிக்க) சான்று இருக்கின்றது.

53

وَاَنْجَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟

மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு மாறு செய்வதை விட்டு விலகியும் இருந்தார்களோ அவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம்.

54

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟

மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். அவர்தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கின்றீர்களா?

55

اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟

என்ன, பெண்களை விட்டுவிட்டு காம உணர்வைத் தீர்ப்பதற்காக ஆண்களையா தேடி அலைகின்றீர்கள்? உண்மையில் நீங்கள் மிகவும் அறிவீனமான செயல்புரியும் மக்கள் ஆவீர்.”

56

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟

ஆயினும், அவருடைய சமூகத்தார் இதைத் தவிர வேறு எந்த பதிலையும் கூறவில்லை; அது இதுதான்: “வெளியேற்றுங்கள் லூத்துடைய குடும்பத்தாரை, உங்களுடைய ஊரைவிட்டு! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள்!” (என்று எள்ளினர்).

57

فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِیْنَ ۟

இறுதியில், லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கியவளாகிவிட வேண்டுமென நாம் முடிவு செய்துவிட்டிருந்தோம்.

58

وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟۠

மேலும், பொழியச் செய்தோம் அம்மக்களின மீது ஒரு மழையை! எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு அது மிகவும் கெட்ட மழையாய் இருந்தது!

59

قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِهِ الَّذِیْنَ اصْطَفٰی ؕ ءٰٓاللّٰهُ خَیْرٌ اَمَّا یُشْرِكُوْنَ ۟

(நபியே!) நீர் கூறும்: “புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! மேலும், சாந்தி உண்டாகுக, அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்கள் மீது!” (இவர்களிடம் கேளும்:) “அல்லாஹ் மேலானவனா அல்லது அவனுடன் இந்த மக்கள் இணைவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் மேலானவையா?”

60

اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآىِٕقَ ذَاتَ بَهْجَةٍ ۚ مَا كَانَ لَكُمْ اَنْ تُنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ هُمْ قَوْمٌ یَّعْدِلُوْنَ ۟ؕ

வானங்களையும், பூமியையும் படைத்தவனும் மேலும், உங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்தவனும் பிறகு, அதன் மூலம் அழகான தோட்டங்களை வளரச் செய்தவனும் யார்? அவற்றின் மரங்களை முளைக்கச் செய்வதற்கு உங்களால் இயலாதிருந்ததே! அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? (இல்லை!) மாறாக, இதே மக்கள்தாம் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.

61

اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِیَ وَجَعَلَ بَیْنَ الْبَحْرَیْنِ حَاجِزًا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؕ

மேலும், பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! மாறாக, இவர்களில் பெரும்பாலோர் அறிவற்றவர்களாய் இருக்கின்றார்கள்.

62

اَمَّنْ یُّجِیْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَیَكْشِفُ السُّوْٓءَ وَیَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ

துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்!

63

اَمَّنْ یَّهْدِیْكُمْ فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ یُّرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ تَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟ؕ

தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? மேலும், தன்னுடைய அருளுக்கு முன்னர் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளேனும் (இப்பணியைச் செய்துகொண்டு) இருக்கின்றதா? அல்லாஹ் மிக உயர்ந்தவனும் மேலானவனும் ஆவான்; இவர்கள் செய்கின்ற இணைவைப்புச் செயல்களை விட்டு!

64

اَمَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَمَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

முதன் முறையாய்ப் படைக்கின்றவனும் பிறகு, மீண்டும் படைக்கப் போகின்றவனும் யார்? மேலும், வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணியில் பங்கு கொண்டு) உள்ளதா? கூறுவீராக: “கொண்டு வாருங்கள் உங்கள் அத்தாட்சியை, நீங்கள் உண்மையாளர்களாய் இருப்பின்!”

65

قُلْ لَّا یَعْلَمُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَیْبَ اِلَّا اللّٰهُ ؕ وَمَا یَشْعُرُوْنَ اَیَّانَ یُبْعَثُوْنَ ۟

இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார். மேலும், (உங்களுடைய கடவுளர்களான) அவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அறிவதில்லையே!”

66

بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِی الْاٰخِرَةِ ۫ بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْهَا ۫ؗ بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ۟۠

உண்மை யாதெனில், மறுமையைப் பற்றிய அறிவு இம் மக்களை விட்டு மறைந்தே போய்விட்டது. இல்லை, இவர்கள் அதைப் பற்றிய சந்தேகத்தில் உழல்கின்றார்கள்! இன்னும் சொல்வதானால், மறுமையைப் பற்றி இவர்கள் குருடர்களாயிருக்கின்றார்கள்.

67

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا ءَاِذَا كُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَىِٕنَّا لَمُخْرَجُوْنَ ۟

மேலும், இந்நிராகரிப்போர் கூறுகின்றார்கள்: “நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் மண்ணாகிப் போய்விட்டால் நாங்கள் உண்மையிலேயே மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா?

68

لَقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَآؤُنَا مِنْ قَبْلُ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟

இந்த விஷயங்கள் பற்றி எங்களுக்கு (அதிகம்) எச்சரிக்கப்பட்டுள்ளது; முன்னர் எங்கள் மூதாதையர்களும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் இவை முன்னோர்களின் காலத்திலிருந்து கேள்விப்பட்டு வருகின்ற வெறும் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!”

69

قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟

கூறுவீராக: “சற்று பூமியில் சுற்றித் திரிந்து குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்.”

70

وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُنْ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟

(நபியே!) இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். இவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் நீர் மனக்கஷ்டமும் அடையாதீர்!

71

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

இவர்கள் கேட்கின்றனர்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த எச்சரிக்கை எப்போது நிறைவேறும்?”

72

قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِیْ تَسْتَعْجِلُوْنَ ۟

நீர் கூறும்: “எந்த ஒரு தண்டனைக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்களோ அதன் ஒரு பகுதி உங்களுக்கு நெருக்கமாக வந்து விட்டிருந்தாலும் அதில் வியப்பொன்றுமில்லை!”

73

وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟

உண்மையில் உம் அதிபதி மக்களின் மீது பெரிதும் அருள் புரிபவனாக இருக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

74

وَاِنَّ رَبَّكَ لَیَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟

அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்திருக்கின்றவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றவற்றையும் திண்ணமாக, உம் இறைவன் நன்கறிகின்றான்.

75

وَمَا مِنْ غَآىِٕبَةٍ فِی السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟

வானத்திலும் பூமியிலும் மறைந்துள்ள எந்த ஒரு பொருளும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை.

76

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَقُصُّ عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَكْثَرَ الَّذِیْ هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

உண்மை இதுவே: இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பெரும்பாலான விஷயங்களின் உண்மை நிலையை அவர்களுக்கு இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது!

77

وَاِنَّهٗ لَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟

மேலும், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றது.

78

اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ بِحُكْمِهٖ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙۚ

(இதேபோன்று) திண்ணமாக, உம் இறைவன் இந்த மக்களிடையேயும் தன்னுடைய கட்டளையால் தீர்ப்பு வழங்குவான். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

79

فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّكَ عَلَی الْحَقِّ الْمُبِیْنِ ۟

எனவே (நபியே!) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப் பீராக! திண்ணமாக, நீர் தெளிவான உண்மையில் இருக்கின்றீர்!

80

اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰی وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟

இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. புறங்காட்டியோடும் செவிடர்களுக்கும் (உம்முடைய) அழைப்பை எடுத்துரைக்க முடியாது.

81

وَمَاۤ اَنْتَ بِهٰدِی الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟

குருடர்களை வழிகேட்டிலிருந்து மீட்டு நேர்வழியில் சேர்த்திடவும் உம்மால் முடியாது! எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும், கீழ்ப்படிபவர்களாயும் விளங்குகின்றார்களோ அவர்களையே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும்.

82

وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ ۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰیٰتِنَا لَا یُوْقِنُوْنَ ۟۠

மேலும், அவர்கள் மீது நம்முடைய ஆணை நிறைவேறும் நேரம் வந்துவிட்டால் நாம் அவர்களுக்கு பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம். மக்கள் நம்முடைய வசனங்கள் மீது உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருந்தார்கள் என்று அது அவர்களிடம் எடுத்துக்கூறும்.

83

وَیَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ یُّكَذِّبُ بِاٰیٰتِنَا فَهُمْ یُوْزَعُوْنَ ۟

மேலும், சற்று சிந்தித்துப் பாருங்கள்; அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ அவர்களை படைபடையாகத் திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, அவர்கள் (வகை மற்றும் தகுதியைப் பொறுத்துப் பல படித்தரங்களில்) முறைப்படுத்தப்படுவார்கள்.

84

حَتّٰۤی اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰیٰتِیْ وَلَمْ تُحِیْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

இவ்வாறாக, அவர்கள் அனைவரும் வந்துவிடும்போது (இறைவன் அவர்களிடம்) வினவுவான்: “என்னுடைய சான்றுகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில் அவற்றைப் பொய்யென்று கூறினீர்களா? இல்லை எனில், நீங்கள் வேறு என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?”

85

وَوَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا یَنْطِقُوْنَ ۟

மேலும், அவர்கள் கொடுமை செய்த காரணத்தினால் வேதனை பற்றிய கட்டளை அவர்கள் மீது நிறைவேற்றப்படும். அப்போது, அவர்களால் எதுவும் பேச முடியாது.

86

اَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا الَّیْلَ لِیَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

இரவை அவர்களுக்கு நிம்மதி அளிக்கக் கூடியதாகவும், பகலைப் பிரகாசிக்கக் கூடியதாகவும் ஆக்கியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இறைநம்பிக்கை கொண்ட சமூகத்தினர்க்கு இவற்றில் அநேக சான்றுகள் இருந்தன!

87

وَیَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِیْنَ ۟

மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது, வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். அந்த திகிலில் இருந்து எவர்களை அல்லாஹ் காப்பாற்ற நாடுவானோ அவர்களைத் தவிர! மேலும், அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் திருமுன் வருவார்கள்.

88

وَتَرَی الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِیَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ؕ صُنْعَ اللّٰهِ الَّذِیْۤ اَتْقَنَ كُلَّ شَیْءٍ ؕ اِنَّهٗ خَبِیْرٌ بِمَا تَفْعَلُوْنَ ۟

(இன்று) நீர் மலைகளைப் பார்க்கும்போது அவை நன்கு நிலைகொண்டிருப்பதாகக் கருதுகின்றீர். ஆனால் (அன்றைய நாளில்) அவை மேகங்களைப் போன்று பறந்தோடிக் கொண்டிருக்கும்! ஒவ்வொரு பொருளையும் நுண்ணறிவினால் செம்மைப்படுத்திய அல்லாஹ்வுடைய பேராற்றலின் விந்தை இது! நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை திண்ணமாக அவன் நன்கறிந்தவன்.

89

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ وَهُمْ مِّنْ فَزَعٍ یَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ۟

எவர் நன்மையைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு அதைவிடச் சிறந்த பிரதிபலன் கிடைக்கும். அத்தகையவர்கள் அந்நாளின் திகிலில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.

90

وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِی النَّارِ ؕ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

ஆனால், எவர்கள் தீமையைக் கொண்டு வருகின்றார்களோ அவர்கள் அனைவரும் முகங்குப்புற நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். நீங்கள் இதைத் தவிர ஏதேனும் கூலி பெறுவீர்களா என்ன செய்த வினைக்கு ஏற்பவே அனுபவிப்பதைத் தவிர?

91

اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِیْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَیْءٍ ؗ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟ۙ

(நபியே! இவர்களிடம் கூறும்:) “எனக்கு இவ்வாறுதான் கட்டளை இடப்பட்டுள்ளது: இந்த (மக்கமா) நகரின் அதிபதிக்கு கீழ்ப்படியுங்கள்; அவனே அதை சங்கை மிக்கதாக ஆக்கினான். மேலும், ஒவ்வொரு பொருளுக்கும் அவனே உரிமையாளனாய் இருக்கின்றான். மேலும், நான் அடிபணிந்தவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றும்,

92

وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِیْنَ ۟

இந்தக் குர்ஆனை ஓதிக் காண்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” எவர் நேர்வழியை மேற்கொள்கின்றாரோ அவர் தம்முடைய நன்மைக்காகவே நேர்வழியை மேற்கொள்கின்றார். மேலும், எவன் வழிபிறழ்ந்து போகின்றானோ அவனிடம் கூறிவிடுவீராக: “நான் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் மட்டுமே இருக்கின்றேன்.”

93

وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَیُرِیْكُمْ اٰیٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠

மேலும், (இம்மக்களிடம்) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அதிவிரைவில் தன்னுடைய சான்றுகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்பவற்றைக் கவனிக்காமல் இல்லை!

PreviousAsh-ShuaraNextAl-Qasas

0:00–:––